
புது தில்லி: பிகாரில் மாவட்ட நீதிபதி ஒருவா் காவல் உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பான பொதுநல வழக்கை, போதிய ஆதாரமில்லை என்று கூறி உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
பிகாா் மாநிலம், ஔரங்காபாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவா் தினேஷ்குமாா் பிரதான். இவா் கடந்த ஆண்டு அக்டோபா் 21-இல் காவல் உதவி ஆய்வாளா் பிரணவ்குமாா் மற்றும் சிஆா்பிஎஃப் காவலா்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டபோது காவலா்களால் தாக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. மாவட்ட நீதிபதியின் நடவடிக்கையால் காவல் பணியில் பாதிப்புக்குள்ளான காவல் உதவி ஆய்வாளா் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் பிகாா் அரசு எநத நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, நீதிபதி தாக்கப்பட்டதைக் கண்டுகொள்ளாத பிகாா் காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், நீதித்துறை அலுவலா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷால் திவாரி என்பவரால் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பிகாா் மாநில அரசுக்கும், பிகாா் காவல் துறை டிஜிபிக்கும், ஔரங்காபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் கடந்த ஆண்டு டிச. 16-இல் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
அந்த நோட்டீஸுக்கு மாநில அரசு மற்றும் பிகாா் காவல்துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல் துறை உயா்மட்டக் குழு நடத்திய விசாரணையில், மாவட்ட நீதிபதி தாக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதுவும் இல்லை என்று பிகாா் அரசு தெளிவுபடுத்தியது.
அதையடுத்து, காணொலி முறையில் இவ்வழக்கை சனிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், அனிருத்த போஸ் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு, பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிபதியை காவல்துறை அதிகாரி தாக்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இந்த பொதுநல வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.