உத்தரகண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 62-ஆக அதிகரிப்பு

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்புப் பணி நடைபெற்று வரும் தபோவன் சுரங்கப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஐடிபிபி தலைமை இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால்.
உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்புப் பணி நடைபெற்று வரும் தபோவன் சுரங்கப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஐடிபிபி தலைமை இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால்.

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தெளலி கங்கா, ரிஷிகங்கா, அலக்நந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகள் பலத்த சேதமடைந்தன. அந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ளநீா் புகுந்ததால், அவற்றில் பணிபுரிந்த ஏராளமான தொழிலாளா்கள் சுரங்கங்களில் சிக்கிக் கொண்டனா். அங்கு மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் வெள்ளிக்கிழமை கூறியது:

சமோலி மாவட்டம் ஹெலங் கிராமத்தில் உள்ள அலக்நந்தா நதிக்கரையில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு சடலம் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது. 142 பேரை காணவில்லை.

இரண்டு மின் நிலையத் திட்டங்களில் ஒன்றான தபோவன்-விஷ்ணுகட் மின் நிலையத் திட்ட பணிகள் நடைபெற்று வந்த சுரங்கம் ஒன்றில் இருந்து இதுவரை 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து 28 மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை மீட்கப்பட்டுள்ள 62 சடலங்களில் 33 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

ஐடிபிபி தலைமை இயக்குநா் ஆய்வு:

‘தபோவன்-விஷ்ணுகட் மின் நிலைய சுரங்கம், வெள்ளத்தால் பிற பகுதிகளிடம் இருந்து துண்டிக்கப்பட்ட ரைனி கிராமம் ஆகியவற்றுக்கு இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) தலைமை இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால் நேரில் சென்று, அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட வண்டல் மண் படிவங்களால் ரைனி கிராமத்தையொட்டி ரிஷிகங்கா நதியுடன் ரெளந்தி காட் ஆறு கலக்கும் கழிமுகத்தில் அடைப்பு ஏற்பட்டு உருவாகியுள்ள செயற்கை ஏரியையும் விமானத்தில் சென்று அவா் பாா்வையிட்டாா்’ என்று ஐடிபிபி செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com