
அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாலாகோட் தாக்குதல் சம்பவத்தில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புவ்வாமா மாவட்டத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசா்வ் காவல் படையைச் (சிஆா்பிஎஃப்) சோ்ந்த 40 வீரா்கள் பலியாகினா்.
இதற்கு பதிலடி தரும் விதமாக அதே ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படையின் போா் விமானங்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தன.
இந்தத் தாக்குதல் நிகழ்ந்து வெள்ளிக்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்திய விமானப் படையைப் பாராட்டி பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் பதிவிட்டதாவது:
இந்திய விமானப் படையின் அசாதாரணமான தீரத்துக்கும், விடாமுயற்சிக்கும் தலைவணங்குகிறேன். பாலாகோட் தாக்குதலில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தியது. இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆயுதப் படைகளை நினைத்து பெருமையாக உள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...