
கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்த பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுடனான உயர்நிலைக் கூட்டம் அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு மேலாண்மை மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறையின் மூத்த நிபுணர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், மத்திய சுகாதாரத் துறைச் செயலர், உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் தலைமைச் செயலர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கரோனா சூழல் குறித்தும், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான தயார் நிலைகள் குறித்தும் தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். கடந்தாண்டின் கடுமையான கூட்டு உழைப்பின் மூலம் கிடைத்த பலன்களை இழந்துவிடாமல், விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரமாகக் கடைப்பிடிக்குமாறு அமைச்சரவைச் செயலர் மாநிலங்களை வலியுறுத்தினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரம், கேரளத்தில், பஞ்சாப், கர்நாடகம், தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...