
குஜராத்: 4 நகரங்களில் அடுத்த 15 நாள்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்பு
குஜராத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அகமதாபாத் உள்பட நான்கு முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களிலும் பிப்.28-ம் தேதியுடன் இரவு ஊரடங்கு நிறைவடைகின்றது.
இந்நிலையில், நான்கு நகரத்திலும் அண்மையில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இரவு ஊரடங்கு உத்தரவை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, தொடர்ந்து ஐந்தாவது முறையாக இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் தீபாவளிக்கு முன்னதாக கரோனா அதிகரித்ததையடுத்து முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.
இரவு ஊரடங்கானது நள்ளிரவு தொடங்கி காலை 6.00 மணிக்கு முடிவடைகின்றது. கரோனா அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்துவது விரைவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத்தில் இதுவரை 2,69,031 பேர் கஜானாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2,62,487 பேர் நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி 460 புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...