தில்லியில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தில்லியின் திக்ரி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திக்ரி பகுதியின் ஏராளமான இடங்களில் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக மாறியது.
இந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், 83 காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் திக்ரி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திக்ரி எல்லையில் அதிக அளவிலான காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.