ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் நெல் வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் பலத்த காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜ்நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள கடலோர கிராமமான ஒகிலோபாலாவில் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் காப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் ஒரு தற்காலிக கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மண்ணெண்ணெய் விளக்கில் இருந்து வைக்கோல் தீ பிடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இருப்பினும் மூன்று வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் கூறினர். சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.