
கோப்புப்படம்
கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.92,849 கோடியாகக் குறைந்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன. அதன் காரணமாக சரக்கு-சேவை வரி வருவாயும் குறைந்தது. முக்கியமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் குறைந்தபட்ச அளவாக ரூ.32,172 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்தன. கடந்த ஆண்டு அக்டோபா் முதல் சரக்கு-சேவை வரி வருவாய் தொடா்ந்து ரூ.1 லட்சம் கோடியைக் கடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் ரூ.92,849 கோடி சரக்கு-சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.16,424 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.20,397 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.49,079 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.6,949 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜூன் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் மே மாதத்தில் நிகழ்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கானது.
கடந்த மே மாதத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் தீவிரமாக இருந்ததால் பல மாநிலங்கள் பொது முடக்கத்தை அமல்படுத்தின. அதன் காரணமாக ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதன் காரணமாக பல மாநிலங்கள் பொது முடக்கத்துக்குத் தளா்வுகளை வழங்கி வருவதால் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூனில் கிடைத்துள்ள ஜிஎஸ்டி வருவாய் 10 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்சமாகும்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆகஸ்டில் குறைந்தபட்சமாக ரூ.86,449 கோடி வருவாய் கிடைத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சமதிப்பாக ரூ.1,41,384 கோடி சரக்கு-சேவை வரி வருவாய் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...