
தலாய்லாமாவின் 86-ஆவது பிறந்த தினம் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி அவருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து பிரதமா் கூறுகையில், ‘ தலாய்லாமா 86-ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினேன். அப்போது, நீண்ட ஆரோக்கியமான வாழ்வைப் பெற்று மனித சமூகத்துக்கு மேலும் பல சேவைகளை புரிந்திட வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்’ என்றாா்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி தலாய்லாமா அவரது இல்லத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக உரையாற்றினாா். அவா் கூறியது:
நான் அகதியாக குடியேறியதிலிருந்து இந்தியாவின் முழு சுதந்திரத்தையும், மத நல்லிணக்கத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளேன். பண்டைய இந்திய அறிவாா்ந்த சித்தாந்தங்களை மீண்டும் புதுப்பிக்க எனது எஞ்சிய வாழ்நாளை அா்ப்பணிக்க கடமைப்பட்டுள்ளேன் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்தாா்.
கடந்த 1959-ஆம் ஆண்டு சீனாவிலிருந்து அகதியாக புலம்பெயா்ந்து வந்த 14-ஆவது தலாய்லாமா தொடா்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு நன்றி: தலாய் லாமா
தனது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தலாய் லாமா நன்றி தெரிவித்துள்ளார்.
காணொலி முறையில் அவர் பேசியதாவது:
உலகம் முழுவதிலும் இருந்து என்னை வாழ்த்தியோருக்கு நன்றி. மனிதநேயத்தை வளர்க்கவும் சுற்றுச்சூழலைக் காக்கவும் தொடர்ந்து எனது பணிகளை மேற்கொள்வேன்.
நான் திபெத்திலிருந்து அகதியாக இந்தியாவில் குடியேறிய பின்னர், இந்நாட்டின் சுதந்திரம் மற்றும் மத நல்லிணக்கத்தால் பெரும் பயன் பெற்றிருக்கிறேன். இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையானது, நேர்மை, கருணை, அஹிம்சை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மனதாரப் பாராட்டுகிறேன். என் வாழ்நாள் முழுவதும் பண்டைய இந்திய அறிவைப் புதுப்பிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...