
தாவர்சந்த் கெலாட்
கர்நாடகாவின் ஆளுநராக ஜூலை 11ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பதவியேற்கிறார்.
மாநிலத்தின் 11வது ஆளுநராக காலை 10.30 மணியளவில் தாவர்சந்த் கெலாட்(வயது 78) பதவியேற்கவுள்ளார்.
நாட்டில் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 6ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
அதில், கர்நாடகத்தின் ஆளுநராக மத்திய சமூகநீதித் துறை அமைச்சராக தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, ஜூலை 7ஆம் தேதி துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவை நேரில் சந்தித்து தனது எம்.பி. பதவியை கெலாட் ராஜிநாமா செய்தார்.
இவர் மூன்று முறை மத்திய பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.