உத்தரப் பிரதேச பாஜக அரசின் கொள்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்குக் காரணம் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், ''தொண்டர்களின் கடுமையான உழைப்பும், கட்சியின் கொள்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையுமே பாஜகவின் வெற்றிக்கு காரணம்'' என தெரிவித்தார்.
மேலும், ''இந்தத் துயரமான கரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணி செய்ததன் காரணமாகவே பாஜகவிற்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. தேர்தல் பணியின் போது தொண்டர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருசிலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு. வேலைவாய்ப்பையும் அளிக்கவுள்ளது'' என தெரிவித்தார்.
இரண்டாவது அலையில் இந்தியா தீவிரமாகப் பாதிக்கப்பட்டதற்கு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரு முக்கியக் காரணியாகக் கூறப்பட்டது. தற்போது கரோனாவின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. விரைவில் மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பெரிதும் விமரிசிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விமரிசனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக யோகி ஆதித்யநாத்தின் பேட்டி அமைந்துள்ளது.