கரோனா பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக வெளியான செய்திகள் அனுமானங்களே என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
கரோனா பலி எண்ணிக்கையானது குறைத்து வெளியிடப்படுவதாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக வெளியான செய்திகள் யாவும் அனுமானங்களே ஊகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய சுகாதார திட்ட மேலாண்மை தகவல் அமைப்பின் தரவுகளோடு சிவில் பதிவு அமைப்பின் தகவல்கள் ஒப்பிட்டு வெளியிடப்படுகிறது. இவை யாவும் தவறான அனுமானங்களே ஆகும்.
ஒரு உயிரிழப்பை சோதனைகளின் அடிப்படையில் இல்லாமல் கரோனா உயிரிழப்பு என கணக்கு காட்டுவது என்பது தவறானது. இம்மாதிரியான அனுமானங்கள் கற்பனையாலானது. வழிகாட்டுதல்களின்படி, கரோனா இறப்பு எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசின் சார்பில் குழுக்கள் அனுப்பப்பட்டு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் உயிரிழப்பை தினமும் கணக்கிட பலமான அமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.