கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களே போர்கோடி தூக்கியது கடந்த சில நாள்களாக பரபரப்பைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட்டுவருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என தகவல் வெளியானது.
இதனிடையே, எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா ராஜிநாமா குறித்து வெளியான செய்திகளில் உண்மையில் இல்லை எனத் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள அவர் பெங்களூரு செல்வதற்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, மேக்கேதாட்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுவதற்காக அவர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். எடியூரப்பாவை எதிர்த்து கருத்து தெரிவித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கட்சி தலைமை அறிவித்திருந்தபோதிலும், மூத்த தலைவர்கள் அவரை எதிர்த்து தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்திவருகின்றனர்.
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை புதிய தலைவரின் தலைமையில் சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.