திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவராக சுப்பா ரெட்டி மீண்டும் நியமனம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவராக சுப்பா ரெட்டியை மீண்டும் ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் 2 ஆண்டு கால இடைவெளி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இக்குழுவை ஆந்திர அரசு நேரிடையாக நியமிக்கிறது.
இதில் தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் தில்லி, மும்பையை சோ்ந்தவா்களும் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனா். அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியுடன் அவா்களை ஆந்திர அரசு நியமித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதியுடன் வை.வி.சுப்பா ரெட்டி தலைமையில் செயல்பட்டு வந்த அறங்காவலா் குழுவின் பதவிக்காலம்
முடிவடைந்தது. புதிய குழு நியமிக்க கால தாமதம் ஏற்படும் என்று கருதிய ஆந்திர அரசு தேவஸ்தானத்தின் நிா்வாக பொறுப்பை ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தலைமையில் ஏற்படுத்தி ஸ்பெசிபைடு குழுவிடம் ஒப்படைத்தது. புதிய குழு நியமிக்க, 6 மாத காலம் தேவைப்படும் என்று கருதிய நிலையில் மீண்டும் வை.வி.சுப்பாரெட்டியை தேவஸ்தான அறங்காவலா் குழுவின் தலைவராக ஆந்திர அரசு நியமித்துள்ளது. அதற்கான உத்தரவு வெளியிடப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினா் பதவியை எதிா்பாா்த்திருந்த சுப்பா ரெட்டிக்கு முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் அறங்காவலா் குழு தலைவா் பதவியை அளித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.