காங்கிரஸ் பஞ்சாப் தலைவராக சித்து நியமிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் முதல்வர் அமரீந்தரின் மனைவி எம்.பி.க்கள் மூலம் புதிய வியூகம் வகுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவிவந்தது. அமரீந்தரின் நடவடிக்கைகளை சித்து வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசி விமரிசித்து வந்தார்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. ஆனால், சித்துவை தலைவராக நியமிக்க அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இருவரையும் சமாதானம் செய்யும் வகையிலேயே காங்கிரஸ் தலைமை சித்துவை தலைவராக்க முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது. காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவின்படி, சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் பஞ்சாபில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரையும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் செயல் தலைவர்களாக ஆக்க முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் கட்சியின் பரப்புரை குழுத் தலைவராக முதல்வர் அமரீந்தர் சிங்கை நியமிக்கவும் திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது. மூத்த தலைவர்களின் தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக, சித்துவை தலைவராக நியமிக்க அமரீந்தர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், சித்து விமரிசித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அமைச்சரவையை மாற்றியமைக்கவும் செயல் தலைவர்களை நியமிக்கவும் முழு அதிகாரம் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை அமரீந்தர் முன்வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
இந்நிலையில், காங்கிரஸ் பஞ்சாப் தலைவராக சித்து நியமிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் முதல்வர் அமரீந்தரின் மனைவி எம்.பி.க்கள் மூலம் புதிய வியூகம் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி சித்துவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பின்னணியில், அமரீந்தரின் மனைவி உள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.