புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு அரசு ஏன் செவிசாய்க்கவில்லை என்று சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவுள்ளன.
இந்நிலையில் சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஹர்சிம்ரத் கெளர் பாதல் ஆகியோர் தனது கட்சியினருடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், 'கடந்த பல மாதங்களாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் ஏன் விவசாயிகளுக்கு செவிசாய்க்கவில்லை?
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அவர்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இந்தச் சட்டத்தினால் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்யுமா று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
சுக்பீர் சிங் பாதல் இதுகுறித்து, 'புதிய வேளாண் சட்டங்களான கறுப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள். மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றுகூடி நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கும் நாளிலேயே சிரோமணி அகாலி தளம் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.