தடுப்பூசி செலுத்தப்பட்டு பின்பு 0.4 சதவிகிதத்தினர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கிடையே இறப்பு விகிதமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கான தேவையும் குறைந்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் தீவிர தன்மை கொண்ட கரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 0.4 சதவிகிதத்தினர் மட்டுமே பலியாகியுள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சியாளர் நிவேதித்தா குப்தா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல், 10 சதவிகிதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனையில் சேர்வதற்கான தேவை ஏற்பட்டது எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 677 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசியின் திறன் குறித்து சந்தேகம் நிலவும் நிலையில், கரோனாவால் ஏற்படும் தீவிரங்களை தடுப்பூசி குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. குறைந்த இடைவேளையில் டெல்டா வகை கரோனா 104 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம், டெல்டா வகை முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு டெல்டா வகை கரோனா பரவியது.