ஆக்சிஜன் இறப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து நாடாளுமன்ற அவையை பாஜக தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக்சிஜன் இறப்பு குறித்து மாநிலங்களவையில் தவறான தகவல்களை அளித்த பாஜக அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்போவதாகவும்அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது நாட்டில் கரோனாவால் பலியானவர்களின் மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார், நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இது குறித்து வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பாஜக அரசு கரோனாவை கட்டுப்படுத்தும் முறை இதுதான். கரோனா குறித்து விவாதத்தின்போது பாஜக அமைச்சர் தெரிவித்தது இந்த தவறான தகவலைத் தான். அனைத்துக் கட்சி விவாதத்தின்போது இதுபோன்ற தவறான தகவல்களை சரியென விளக்கம் தரலாமா?.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கரோனா நோயாளிகள் உயிரிழந்ததை நாம் கண்முன்பு பார்த்தோம். நமக்கு அவை குறித்து தெரியும். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என அவையை அமைச்சர் தவறாக வழிநடத்துகிறார். அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.