அசாம்- மிசோரம் எல்லை கலவரத்தில் உயிரிழந்த காவலர்களின் உடலுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அசாம்- மிசோரம் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று மிசோரம் எல்லை கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் அஸ்ஸாம் எல்லை கிராம மக்களுக்கு இடையே நடந்த மோதலில் அசாம் காவலர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சில்ச்சரில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அஞ்சலிக்காக 5 காவலர்களின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 5 காவலர்களின் உடலுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா நேரில் அஞ்சலி செலுத்தினார். எங்களுடைய துணிச்சலான காவலர்களின் உயிரிழப்பால் நாங்கள் மிகுந்த வேதனையடைகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சில்ச்சரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களையும் முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.