தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இருக்கும் தயக்கத்தைப் போக்க காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட தலைவர்களுடன் காணொலி வாயிலாக சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது:
"அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய நமது கட்சி முக்கியப் பங்காற்றுவது பெருந்தொற்று காலத்தில் அவசியமானது. தேசிய அளவில் தடுப்பூசி செலுத்தப்படும் விகிதம் மும்மடங்கு அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால்தான் இந்தாண்டு இறுதிக்குள் 75 சதவிகித மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.
இது முற்றிலும் தடுப்பூசி விநியோகத்தின் அளவைப் பொறுத்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதேசமயம், தடுப்பூசிக்கான பதிவு செய்யப்படும் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இருக்கும் தயக்கத்தைப் போக்குவதையும், தடுப்பூசிகள் வீணாவது குறைவதையும் உறுதி செய்ய வேண்டும்.
மூன்றாவது அலை இன்னும் சில மாதங்களில் வரும் என்றும் அது குழந்தைகளைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இதற்கும் நமது கவனம் தேவை. மூன்றாவது அலை தாக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் நமது பணிகளைத் தொடர வேண்டும். கட்டுப்பாட்டு அறைகள், உதவி எண்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் அவசர சேவைகளும் தொடர வேண்டும்.”