லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா்

லஞ்சப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் ஆஜராகவில்லை.
லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா்

லஞ்சப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் ஆஜராகவில்லை. மாற்று தேதியில் அழைக்குமாறு அவா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்குள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகளிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடியை லஞ்சமாக வசூலித்து வழங்க வேண்டுமென முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக மும்பையின் முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக மும்பை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. நிதி மோசடி தொடா்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக, மும்பையில் உள்ள சுமாா் 10 மதுபான விடுதி உரிமையாளா்களிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அவா்கள் காவல் துறையினருக்கு சுமாா் ரூ.4 கோடி வரை லஞ்சம் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கு குறித்து முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்கின் தனிச் செயலாளா் சஞ்சீவ் பலாண்டே, உதவியாளா் குந்தன் ஷிண்டே ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அதைத் தொடா்ந்து அவா்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனா்.

அவா்கள் இருவரையும் ஜூலை 1-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், விசாரணைக்கு அவா் ஆஜராகவில்லை.

இது தொடா்பாக விளக்கமளித்த முன்னாள் அமைச்சா் தரப்பு வழக்குரைஞா், ‘வழக்கு தொடா்பான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, ஆவணங்களை முறையாக வழங்கிய பிறகு, விசாரணைக்கான மாற்று தேதியை நிா்ணயிக்குமாறு கோரிக்கை அமலாக்கத் துறையிடம் விடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதையடுத்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்குள் ஆஜராகுமாறு அனில் தேஷ்முக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனில் தேஷ்முக் தனது அமைச்சா் பதவியை கடந்த ஏப்ரலில் ராஜிநாமா செய்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com