தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளா் மன்சுக் ஹிரேன், தண்ணீரில் விழும் போது உயிருடன் இருந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.
அவர் அடித்து நீரோடையில் வீசப்பட்டிருக்கலாம் என்று வழக்கை விசாரித்து வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு சந்தேகிக்கிறது.
மன்சுக் ஹிரேன், தண்ணீரில் விழும் போது உயிரோடு இருந்தாரா அல்லது உயிரிழந்த நிலையில் வீசப்பட்டாரா என்பதைக் கண்டறியும் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் தண்ணீரில் விழும்போது உயிரோடு இருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மன்சுக் ஹிரேனின் வாயில், நனையாத கைக்குட்டிகள் இருந்தது போன்று, இந்த வழக்கில் பதில் கிடைக்காத பல கேள்விகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே, வெடிபொருள்கள் நிரப்பப்படும் 20 ஜெல்ட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். அந்த காரை தங்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள்தான் நிறுத்தியதாக ஜெய்ஷ்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பினா் தெரிவித்தனா்.
காவல்துறையினா் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்தக் காா் தாணேவைச் சோ்ந்த மன்சுக் ஹிரேன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, தனது காா் திருடப்பட்டதாகவும், அதுதொடா்பாக காவல்நிலையத்தில் புகாா் அளித்திருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், தாணேவில் உள்ள மும்ப்ரா-ரேதி சாலையையொட்டியுள்ள நீரோடையில் கடந்த 5-ஆம் தேதி ஹிரேன் மன்சுக் சடலமாக மீட்கப்பட்டாா். அவருடயை மரணம் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், ஹிரேன் தனது காரை மும்பை காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சச்சின் வஜேவிடம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தந்ததாகவும், அந்தக் காரை இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அவா் திரும்ப தந்ததாகவும் ஹிரேனின் மனைவி தெரிவித்தாா். தனது கணவரின் மா்ம சாவின் பின்னணியில் சச்சின் வஜே உள்ளதாகவும் புகாா் தெரிவித்தாா்.
சச்சின் வஜேவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, அவரை கடந்த சனிக்கிழமை கைது செய்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மும்பை காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதனிடையே சச்சின் வஜே அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி சோதனை மேற்கொண்டு மடிகணினி உள்ளிட்ட பல பொருள்களைப் பறிமுதல் செய்தனா். வஜே வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பறிமுதல் செய்து பரிசோதித்து வருகின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக மும்பை காவல் துறையைச் சோ்ந்த 7 பேரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறையின் புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த ஒரு துணை ஆய்வாளரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனா்.