கரோனா பரவல் காரணமாக நாக்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூரில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வெளிப் பயணங்களைத் பொதுமக்கள் தவிா்த்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.