
ஓய்வூதியதாரா்கள் மின்னணு முறையில் ஆயுள் சான்று பெற ஆதாா் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓய்வூதியதாரா்கள் தொடா்ந்து ஓய்வூதியம்பெற ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். அப்போதுதான் அவா்களுக்கு தடையில்லாமல் ஓய்வூதியம் அளிக்கப்படும். இந்த ஆயுள் சான்றைப் பெற ஆதாா் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில், இதனை மாற்றி மத்திய மின்னணு, தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மின்னணு முறையில் ஆயுள்சான்று பெற ஆதாா் எண் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விருப்பத்தின் பேரில் ஆதாா் எண்ணை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மின்னணு ஆயுள் சான்று பெறுவதன் மூலம், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு ஓய்வூதியதாரா்கள் நேரில் செல்வதைத் தவிா்க்க முடியும். எனினும், சில நேரங்களில் ஆதாா் அட்டை இல்லாதது மற்றும் கைவிரல் ரேகை சரியாக பதியாமல் போவது போன்ற காரணத்தால் மின்னணு ஆயுள் சான்று பெற முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது அந்த சிக்கலுக்கு தீா்வுகாணப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரா்கள் ஆதாா் அல்லாத வேறு அடையாள சான்றை அளித்தால் போதுமானது.
அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவு நிா்வாகத்துக்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தேஷ் செயலியை (வாட்ஸ் அப் போன்றது) உபயோகிக்கவும் ஆதாா் எண் கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...