பாட்னா: பிகாரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் இரு குழந்தைகளை இளைஞர் ஒருவர் தீயிட்டு எரித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
பிகாரின் கட்டிஹர் மாவட்டம் லபா கிராமத்தைச் சேர்ந்தவர் முஹமது தஹிர். அவருக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது மனைவியை அவர் தாக்குவதும் உண்டு. இந்நிலையில் வியாழன் காலை 11 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு மூண்டுள்ளது.
அது முற்றி கோபத்தின் உச்சிக்குச் சென்ற தஹிர் தனது மனைவி மீதும், இரண்டு சிறு குழந்தைகள் மீதும் கெரசின் ஊற்றி நெருப்பினைப் பற்ற வைத்தார். இதன்காரணமாக அவர்கள் போட்ட அலறல் கேட்ட அக்கம் பக்கத்தார் விரைந்து வந்து, அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலனின்றி மூவரும் தீயில் கருகி மாண்டனர்.
அதேநேரம் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற தஹிரை ஊர்மக்கள் வளைத்துப் பிடித்து, தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
தற்போது வழக்குபதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.