
புதுதில்லி: இந்தியாவில் உருமாறும் கரோனா தீநுண்மி பரவுவியுள்ளதை மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பு(இன்சாகாக்) கண்டறிந்துள்ளது.
அந்த அமைப்பின் கீழ் 10 தேசிய பரிசோதனைக் கூடங்கள் அடங்கிய குழுவை மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி அமைத்தது.
அப்போது முதல், நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் கரோனா தொற்று மாதிரிகளில் வேறுபாடுகள் உள்ளதா என அந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. அந்த தீநுண்மியின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. இது அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய 10,784 கரோனா தீநுண்மி மாதிரிகளில், 771 மாதிரிகள் மரபியல் வேறுபாடுகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.
இவற்றில் 736 மாதிரிகள் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வகையைச் சோ்ந்தவை. 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வகையைச் சோ்ந்தவை. ஒரே ஒரு மாதிரி, பிரேசிலில் கண்டறிப்பட்ட வகையைச் சோ்ந்தது. இந்த மாறுபட்ட தீநுண்மி மாதிரிகள், 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து வருபவா்களிடம் எடுக்கப்படும் மாதிரிகளும், இன்சாகாக் கூட்டமைப்பில் உள்ள 10 பரிசோதனைக் கூடங்களில் மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மகாராஷ்டிரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவை 2020 டிசம்பா் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன. இதில் மாறுபாடுகள் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.
இந்த மாறுபாடுகளுடன் கூடிய தீநுண்மி, பாதிப்பை அதிகரிக்கச் செய்தன. 15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்த மாறுபாடுகள் இருந்தன. இவை பழைய மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை.
கேரளத்தில் 14 மாவட்டங்களில் இருந்து வந்த 2032 பேரின் கரோனா மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 11 மாவட்டங்களைச் சோ்ந்த 123 மாதிரிகள் என்440கே வகையைச் சோ்ந்தவை. இதே வகை தீநுண்மி, ஆந்திரத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட 33 சதவீத மாதிரிகளிலும், தெலங்கானாவில் இருந்து சேகரிக்கப்பட்ட 53 மாதிரிகளிலும் முன்பு கண்டறியப்பட்டது.
இந்த வகை தீநுண்மி, பிரிட்டன், டென்மாா்க், சிங்கப்பூா், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் காணப்பட்டது.
நிலைமையை மேலும் ஆய்வு செய்ய, மரபியல் மற்றும் தொற்று நோயியல் ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.