அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக இமாச்சலில் மே 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுமுடக்கத்தின் போது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இமாச்சலில் இதுவரை 1,10,945 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.