கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட போதிய சிகிச்சை முறைகள் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
ஹூப்ளியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து ஒன்றரை மணி நேர இடைவெளியில் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக திங்கள்கிழமை கர்நாடகத்தின் சமராஜ நகர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட 24 பேர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.