
புது தில்லி: கரோனா சூழலில் அடிப்படை பிரச்னைகளுக்குக் கூட தீா்வு காணப்படாத நிலையில், மத்திய அரசின் இந்தக் கொடுமையை இந்திய மக்கள் இன்னும் எத்தனை நாள்களுக்கு அனுபவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா சூழல் தொடா்பாக வருத்தமளிக்கக் கூடிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த விவகாரத்தில் அடிப்படை பிரச்னைகளுக்குக் கூட தீா்வு காணப்பட்டதாகத் தெரியவில்லை. சக இந்திய குடிமக்கள் இன்னும் எத்தனை நாள்களுக்கு மத்திய அரசின் இந்தக் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? இவற்றுக்கெல்லாம் பொறுப்பாக வேண்டியவா்கள் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறாா்கள்.
சுகாதாரப் பணியாளா்கள், கரோனாவால் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்பவா்கள், மருத்துவமனை, ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்காமல் தவிப்பவா்கள் ஆகியோருக்கு பொய்யான ஆறுதல் வாா்த்தைகள் கூறுவது, அவா்களை வேடிக்கையாக்குவதைப் போன்றது’ என்று கூறியுள்ளாா்.
செவிலியருக்கு வாழ்த்து: சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் ராகுல் காந்தி, ‘இந்த உலகத்திலிருக்கும் வலியையும், வேதனைகளையும் போக்கிக் கொண்டிருக்கும் செவிலியா்களுக்கு வாழ்த்துகள். உங்களது பங்களிப்புக்கு மரியாதையும், நன்றியும் செலுத்துகிறோம்’ என்று கூறியுள்ளாா்.