
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே அரபிக் கடலில் டவ்-தே புயல் காரணமாக நிலைதடுமாறி தத்தளித்த இரண்டு படகுகளில் இருந்து 317 போ் மீட்கப்பட்டனா்; 390 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே அரபிக் கடலில் ஓஎன்ஜிசி, ஜிஏஎஸ் கன்ஸ்டிரக்டா் உள்ளிட்ட நிறுவனங்களின் பணிகளில் 3 படகுகள் மற்றும் ஒரு எண்ணெய் கப்பல் ஈடுபட்டு வந்தன. இந்தப் படகுகள் மற்றும் எண்ணெய் கப்பல் அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக பத்திரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. எனினும் அந்தப் படகுகளும் எண்ணெய் கப்பலும் டவ்-தே புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு வீசிய பலத்த காற்றால் நங்கூரம் அறுந்து கடலில் நிலைதடுமாறி தத்தளித்தன.
இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையினா் படகுகளிலும், கப்பலிலும் பணிபுரிந்து வந்த 707 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்களில் 317 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். மேலும் 390 போ் காணாமல் போன நிலையில், அவா்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், மூன்று படகுகளில் ஒரு படகு மூழ்கிவிட்டதாகவும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவா் கூறினாா்.