திருமலையில் 4,587 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை 4,587 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை 4,587 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.

நாடு முழுவதும் கொவைட் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் பொது முடக்கம், ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா். இதன்காரணமாக கடந்த 2 வாரங்களாக தினசரி 5 ஆயிரத்திற்கும் குறைவான பக்தா்கள் தரிசனத்தில் பங்கேற்றனா். அதன்படி திங்கள்கிழமை முழுவதும் 4,587 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,065 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட், நன்கொடையாளா்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

பக்தா்களின் வருகை குறைவாக உள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தா்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தா்கள் 15 நிமிஷங்களில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனா். ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறையாக, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளிப் போடுமாறு என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கோவிட் விதிமுறைகள் காரணமாக தரிசனத்திற்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன நாளிலிருந்து 90 நாள்களுக்குள் தரிசிக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது. மேலும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் தங்கள் தரிசன தேதியை விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் கொவைட் தொற்று காரணமாக தேவஸ்தானம் வழங்கி உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com