புவனேஸ்வரம்: யாஸ் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக, வடக்கு ஒடிசாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
கோயின்ஜார் மாவட்டம் ஜோடா என்ற பகுதியில் மிக அதிகனமழை பெய்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 268.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டம் ஜாஷ்பூர் பகுதியில் 254.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுந்தர்கர் மாவட்டம் லதிகதா பகுதியில் 213 மி.மீ. மழையும், வாசுதேவ்பூர் மாவட்டம் பத்ராக் பகுதியில் 195 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இந்த மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை மதியம் கரையைக் கடந்தது. இதையொட்டி, ஒடிசாவின் வடக்குப் பகுதியிலும் மேற்கு வங்கத்திலும் கடலோரப் பகுதிகளில் 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. பாலாசோரில் இருந்து தெற்கே 50 கி.மீ. தொலைவில் காலை 9 மணிக்கு யாஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. மதியம் 1.30 மணியளவில் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.