
யாஸ் புயல்: பிகாரில் ஒருவர் பலி, 6 பேர் காயம்
பிகாரின் பெகுசராய் மாவட்டத்தில் பழைய வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தெக்ரா காவல் நிலையத்தின் கீழ் உள்ள நோன்பூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. யாஸ் புயல் பிகார் மாநிலத்தின் பல மாவட்டங்களை வெள்ளிக்கிழமை தாக்கியது.
உயிரிழந்தவர் கீதா பாஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 36 மணி நேரமாகப் பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்தது. 2 குழந்தைகள் உள்பட காயமடைந்தவர்கள் பெகுசாராயின் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்னா, வைஷாலி, சரண், கயா, நவாடா, பெகுசராய், மதுபானி மற்றும் சீதாமாரி போன்ற மாவட்டங்கள் வியாழக்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றன.
ஜெய் பிரபா பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளதால், பிகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.