திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 11, 055 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனா். அதனால் ஏற்ற இறக்கங்களுடன் பக்தா்கள் வருகை உள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை 11,055 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். 3,988 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
பக்தா்களின் வருகை குறைவாக உள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால் 15 நிமிடங்களில் சுவாமியை தரிசித்து திரும்புகின்றனா். திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சா்வதரிசன டோக்கன்கள் கடந்த ஏப். 12-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.