கரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு உதவ 16 ஆக்சிஜன் ஜெனரேட்டா்கள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பிரான்ஸ் அனுப்புகிறது.
கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருக்கும் என்று அந்நாட்டு அதிபா் இமானுவேல் மேக்ரான் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே மருத்துவ உபகரணங்களையும் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோா் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் நேற்று உரையாடிய நிலையில், பிரான்ஸ் தூதரகம் இந்த முக்கிய அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. அதில், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா இல்லாமல் வெற்றியை அடைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரான்ஸிலிருந்து ஜூன் மத்தியில் 10 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களுடன் கார்கோ விமானம் இந்தியா வரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மற்றொரு விமானமும் மருத்துவ உபரகணங்களுடன் வரவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.