திருவனந்தபுரம்: மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் பலரும் அறிந்ததே. அது கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம், கல்லீரல் புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன், மணத்தக்காளி கீரைக்கு உள்ளதாக அங்கீகாரம் அளித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையம் இது குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகளின்படி, இந்த மருந்துக்கு ஆராய்ச்சிநிலை மருந்துகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் வழங்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த மருந்தை மேம்படுத்தி, விரிவுபடுத்தி, அரிதான நோய்களுக்கு புதிய சிகிச்சைகளை அளிக்க இயலும். இந்த மருந்துக்கு விரைவாக அனுமதி கிடைக்கவும் இது உதவுகிறது.
மேலும் படிக்க.. குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு வரியில் பதில்
ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரூபி ஜான் ஆன்டோ, அவரது மாணவர் டாக்டர் லெஷ்மி ஆர் நாத் ஆகியோர் கொண்ட ஆராய்ச்சிக் குழு, இந்த மருந்துக்கான மூலக்கூறு, உட்ரோசைட் பி (Uttroside-B) ஐ மணத்தக்காளி இலையிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்து ஆய்வு செய்தனர்.
அது பற்றி அவர்கள் கூறியதாவது, தற்போது, கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்துகளின் கூட்டுச்சேர்க்கை, தற்போது பயன்பாட்டிலிருக்கும் மருந்தை விட கூடுதல் திறன்கொண்டது.
தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட கொழுப்பு கல்லீரல் சிகிச்சையில், இந்த மருந்தின் கூட்டுச்சேர்க்கை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களது காப்புரிமைப் பெற்ற தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் மருந்து நிறுவனமான க்யூபயோமெட் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப பரிமாற்றம், ஓக்லஹோமா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் நடந்துள்ளது.
ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் சந்திரபாஸ் நாராயணா கூறியதாவது, இந்த ஆராய்ச்சியின் மூலம், கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சையில் பெரிய திருப்புமுனையாக அமையும் என்றார்.
மேலும், இந்த ஆய்வுகள், பல கூற்றுகளை உடைக்கிறது, வயிற்றுக்கு வரும் உணவிலிருந்து கழிவுகளை அகற்றி, செரிமானத்துக்கு உதவும் கல்லீரல்தான், தற்போதைய நவீன உணகில் அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கும் உடலுறுப்பாக உள்ளது. கல்லீரலைத் தாக்கும் இந்தக் கொடிய நோயால் ஆண்டுக்கு 8 லட்சம் பேர மரணிக்கிறார்கள், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 9 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்.
டாக்டர் ரூபி மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழு, தற்போது, மணத்தக்காளி கீரையிலிருந்து பிரித்தெடுக்கும் மூலக்கூறு மருந்தின் கூட்டுச்சேர்க்கையானது எந்த அளவுக்கு கல்லீரல் நோயைக் குணப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது என்ற ஆய்வை நடத்தி வருகிறது. குடிப்பழக்கம் அல்லாத, மஞ்சள்காமாலை பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் உணவிலிருக்கும் கழிவுகளால் உருவாகிறது. இந்த ஆய்வானது, சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்டி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டாக்டர் எல். ரவிஷங்கரின் கூட்டு முயற்சியுடன் நடக்கிறது. இவர்தான், சோலானம் நிக்ரம் கொண்ட கீரைகளிலிருந்து மூலக்கூறை பிரித்தெடுக்கும் சிறப்பு முறையை மேம்படுத்தியவர்.