இரண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரண்டு மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுகுறித்து மத்திய அரசு இன்று தாக்கல் செய்த மனுவில், "இந்தாண்டு நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வை மீண்டும் நடத்த அனுமதி வழங்கினால், அனைத்து ஆண்டும், ஏதாவது தவறுகள் நடைபெறும் போது தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுப்பர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல். என். ராவ், "மாணவர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம், அவர்களுடன் அனுதாபப்படுகிறோம். ஆனால் மறு தேர்வை நடத்த முடியாது" என்றார்.
சோலாப்பூர் நீட் தேர்வு மையத்தில், பொருத்தமற்ற கேள்வித்தாள்களையும் விடைத்தாள்களையும் கண்காணிப்பாளர்கள் அளித்ததாகவும் இந்த தவறை சுட்டிகாட்டியபோது அதை திருத்தி கொள்ளவில்லை எனக் கூறி வைஷ்ணவி போபாலே, அபிஷேக் கப்சே ஆகிய மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, மாணவர்களுக்கு ஆதரவாக மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிக்க | கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு கிடைக்கும்?
இரண்டு மாணவர்களுக்கு மட்டும் புதிதாக தேர்வை நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு, நவம்பர் 1ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முன்னதாக, அக்டோபர் 28ஆம் தேதி, நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.