தலைநகரான தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுப்போக்குவத்தை ஊக்குவிக்க கூடுதலாக 1000 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்துகள் நாளை (நவ.17) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பொதுமக்கள் தனியாக வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறு அறிவிப்பு வரும் வரை தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அறிவுறுத்தப்படுகிறது.
வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். காவல் துறையினரும், போக்குவரத்துக் காவலர்களும் இதனை உறுதி செய்ய வேண்டும்.
பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த அளவு கார்பன் வாயுக்களை வெளியிடும் 1000 சிஎன்ஜி சிறப்பு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இவை நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
பொதுமக்கள் அதிக அளவு தில்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளையும் மெட்ரோ ரயிலையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.