காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் கட்டாயம் என் -95 முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தலைநகரான தில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மேலும் அடுத்த சில நாள்களுக்கு காற்றின் தரம் மிகவும்மோசமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது கரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ளவும் உதவும் எனவும், கரோனா தொற்றுக்கு போலவே காற்று மாசுபாட்டிற்கும் என் -95 முகக்கவசங்களை பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
என் -95 முகக்கவசம்:
என் -95 முகக்கவசங்கள் காற்றில் உள்ள தூசி, சிறிய துகள்கள் உள் நுழைவதைத் தடுக்கும். இதனால் காற்று மாசின் மூலம் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க இயலும்.
தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் தரத்திற்கு என் -95 முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல தொழிற்சாலைகளில் ரசாயனம் தயாரிப்பில் ஈடுபடுவதால் இந்த என்-95 முக கவசம் காற்றை தடுத்து தூய்மையான காற்றைச் சுவாசிக்க உதவுகிறது.
என்-95 என்பது அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தின் தயாரிப்பில் இருந்து வருகிறது. ஆனால் இந்த முகக்கவசங்களை தற்போது பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த முக கவசத்தை 8 மணி நேரம் பயன்படுத்தலாம்.