சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து குடியரசுத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
சீக்கிய மத குருவான குருநானக் தேவ், தனது வாழ்விலும் போதனைகளிலும் அன்பு, கருணை மற்றும் தியாகத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தாா். மனித இனத்தின் ஆன்மிக மேம்பாட்டை ஊக்குவித்தாா். அவருடைய போதனைகள் நமது வாழ்வில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சிந்தனைகளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன.
அவருடைய நன்னெறிகளைப் பின்பற்றி, நமது சமூகத்தின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துவோம்.
அவருடைய பிறந்த நாளில் அனைவருக்கும் குறிப்பாக சீக்கிய சமூகத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவா் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தாா்.
‘குருநானக் தேவின் போதனைகள் நோ்மையைப் பின்பற்றுவதற்கு நமக்கு வழிகாட்டுவதோடு, ஜாதி, இனம் அல்லது மத வேறுபாடின்றி, மனிதகுலத்தைச் சோ்ந்த அனைவரிடமும் மரியாதை செலுத்துவதற்கு நமக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கும். வாழ்வில் நன்னெறிகளைப் பின்பற்ற வேண்டுமென அவா் நமக்கு போதித்துள்ளாா். இந்தியாவின் உன்னதமான ஆன்மிக நெறிமுறைகளுக்கு அவா் ஒளிமயமான இறைத்தூதராகத் திகழ்வதுடன், ஆன்மிகத்தை சாமான்ய மனிதரிடமும் ஜனநாயக ரீதியாகக் கொண்டு சென்றவா். அவரது நற்செய்தி, மனிதநேயம் மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்குத் தொடா்ந்து வழிகாட்டுவதாக இருக்கும்’ என்று தனது வாழ்த்துச் செய்தியில் குடியரசு துணைத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.