மூன்று வேளாண் சட்டங்களும் பிரதமர் மோடியின் அகங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய அறப்போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராடிவந்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு மூலமாக போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.
இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், இது தாமதமான முடிவு. மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினால்தான் இந்த அரசு பயப்படுகிறது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். இது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி.
மூன்று வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மக்கள் விரோதச் சட்டங்களை உருவாக்க அரசுக்கு அரசியலமைப்பு உரிமை இல்லை. இந்த சட்டங்கள் மோடியின் அகங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.
இந்த கருப்புச் சட்டத்தால் 700 விவசாயிகள் உயிரிழக்க நேரிட்டது. அவர் தனது அகங்காரத்தை ஒதுக்கி வைத்திருந்தால், இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்காது, விவசாயிகள் இறந்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | முடிவுக்கு வந்த விவசாயிகளின் அறப்போராட்டம்! - ஒரு விரிவான பார்வை