ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை சிறப்பாகச் செயல்படுத்தும் நகரங்களில் ஹிமாசல் தலைநகா் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தின் கோவை நகரம் இரண்டாமிடத்தையும், திருச்சி நகரம் 8-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
நீடித்த வளா்ச்சியை உறுதி செய்வதற்காக 17 இலக்குகளை ஐ.நா. நிா்ணயித்துள்ளது. வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், சிறந்த கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீா், மலிவான-தூய்மை எரிசக்தி, ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல், பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல் உள்ளிட்ட இலக்குகள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்த இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டுமென நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் இந்திய நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து நீதி ஆயோக், ஜொ்மனியின் ஜிஐஇசட் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தின. நாட்டில் உள்ள 56 நகரங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வுக் குறியீட்டையும், அதுசாா்ந்த தகவல் தளத்தையும் நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். ஆய்வுக் குறியீட்டில் சிம்லா, கோவை, சண்டீகா் ஆகிய நகரங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. தன்பாத், மீரட், இடாநகா் ஆகியவை கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
இது தொடா்பாக ராஜீவ் குமாா் கூறுகையில், ‘‘வளா்ச்சியின் இயந்திரமாக நகரங்கள் வேகமாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா-ஜொ்மனி ஒத்துழைப்புடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் குறியீடும், தகவல் தளமும் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் நகரங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும்’’ என்றாா்.
இந்த ஆய்வுக் குறியீட்டில் மதிப்பெண்களின் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 100 மதிப்பெண் என்பது அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதைக் குறிக்கும். ஆனால், எந்த நகரமும் 80 மதிப்பெண்களுக்கு அதிகமாகப் பெறவில்லை.