அச்சத்தை ஏற்படுத்தும் புதிய வகை கரோனா; ஆறுதல் கூறிய அரவிந்த் கேஜரிவால்

கரோனா இரண்டாம் அலையின்போது மிகவும் மோசகமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் தில்லியும் ஒன்றாக இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பரவிய புதிய வகை கரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞான்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்திற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிபுணர்கள், புதிய வகை உருமாறிய கரோனா குறித்து தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம்  விளக்கவுள்ளனர். B.1.1.529 என அறியப்படும் புதிய வகை கரோனாவிலிருந்து தேசிய தலைநகரை பாதுகாப்பது எப்படி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என ஆலோசனை வழங்கவுள்ளனர்.

இதுகுறித்து அரவிந்த் கேஜரிவால் ட்விட்டர் பக்கத்தில், "ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவியுள்ள புதிய கரோனா மாறுபாட்டின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, திங்கட்கிழமை தில்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர்களுக்கு ஒரு விளக்கக்காட்சியை வழங்குமாறு நிபுணர்களைக் கோரியுள்ளோம். 

மேலும் நாங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கவுள்ளனர். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என பதிவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில்தான், இந்த புதிய வகை கரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர், போட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அது பரவியுள்ளது. அங்கு, இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் இந்த புதிய வகை  கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வகை கரோனாவின் புரத கூர்முனைகளில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்படுவது தடுப்பூசிக்கு எதிராக போராடும் அதன் தன்மையை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பரவல் தன்மை அதிகரித்து தீவிரமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடும் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், "இந்த புதிய வகை கணிசமாக அதிக எண்ணிக்கையிலான மாறுதல்களை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சமீபத்தில் தளர்த்தப்பட்ட விசா கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச பயணம் தொடங்கப்பட்டதன் மூலம், நாட்டிற்கு கடுமையான பொது சுகாதார தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com