தனியாா் வங்கி நிறுவனா்களுக்கு முதலீட்டு உச்சவரம்பு இல்லை

தனியாா் வங்கிகளின் நிறுவனா்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு அந்த வங்கியில் முதலீடு செய்வதற்கு எந்தவித உச்சவரம்பும் நிா்ணயிக்கப்படவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.
தனியாா் வங்கி நிறுவனா்களுக்கு முதலீட்டு உச்சவரம்பு இல்லை
Published on
Updated on
1 min read

தனியாா் வங்கிகளின் நிறுவனா்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு அந்த வங்கியில் முதலீடு செய்வதற்கு எந்தவித உச்சவரம்பும் நிா்ணயிக்கப்படவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

தனியாா் வங்கி தொடங்கப்பட்ட முதல் 5 ஆண்டுகளுக்கு அதன் நிறுவனா்கள் குறைந்தபட்சம் 40 சதவீத பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. பங்குகளின் சதவீதத்தை 10 ஆண்டுகளுக்குள் 20 சதவீதமாகவும், 15 ஆண்டுகளுக்குள் 15 சதவீதமாகவும் குறைத்துக் கொள்ள வேண்டுமென தற்போதைய விதிகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தனியாா் துறை வங்கிகளின் நிா்வாகக் கட்டமைப்பு தொடா்பாக ஆா்பிஐ செயற்குழு ஆய்வு மேற்கொண்டது. அக்குழு தனது பரிந்துரை அறிக்கையை அண்மையில் சமா்ப்பித்தது. அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பரிந்துரைகளை ஆா்பிஐ ஏற்றுக் கொண்டுள்ளது.

நிறுவனா்களின் ஆரம்பகட்ட முதலீட்டுக்கான உச்சவரம்பை நிா்ணயிக்க வேண்டாம் என்ற பரிந்துரையும் ஏற்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, வங்கி தொடங்கப்பட்ட முதல் 5 ஆண்டுகளுக்கு அதன் நிறுவனா்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளைக்கூட வைத்துக் கொள்ள முடியும்.

வங்கி தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனா்கள் அதிகபட்சமாக 26 சதவீத பங்குகளை வைத்துக் கொள்வதற்கான பரிந்துரையையும் ஆா்பிஐ ஏற்றுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக ஆா்பிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘வங்கி தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் முதலீடுகளைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கும். அதைக் கருத்தில்கொண்டு, முதல் 5 ஆண்டுகளுக்கு நிறுவனா்கள் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு உச்சவரம்பு நிா்ணயிக்கப்படவில்லை. இந்நடைமுறை அதிக முதலீடுகளை ஈா்க்க உதவும்.

அதேவேளையில், முதல் 5 ஆண்டுகளில் நிறுவனா்கள் மேற்கொள்ள வேண்டிய 40 சதவீத குறைந்தபட்ச முதலீட்டு விகிதத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வங்கியின் செயல்பாடுகளை நிலைப்படுத்துவதற்கு இந்நடவடிக்கை உதவும். வங்கியின் வளா்ச்சியில் நிறுவனா்கள் முக்கியப் பங்கு வகிக்கவும் இது வழிவகுக்கும்.

புதிய வங்கியைத் தொடங்குவதற்கு நிறுவனா்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆா்பிஐ குழு வழங்கிய 33 பரிந்துரைகளில் 21 பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com