புதியவகை கரோனா பரவலைத் தடுக்க தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட புதிய வகை கரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தென்னாப்பிரிக்க நாட்டுடனான விமானப் போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | புதிய வகை கரோனா: பிரதமர் மோடி ஆலோசனை
இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “ புதிய வகை கரோனா பரவல் பதிவாகியுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்
மேலும். “கடும் முயற்சிகளுக்குப் பிறகு கரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டுள்ளது. புதிய வகை கரோனா வைரஸைத் தடுப்பதற்கு வாய்ப்புள்ள அனைத்து வகைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாட்டில் இதுவரை புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.