காற்று மாசுபாட்டால் பாதிப்புக்குள்ளாகும் தில்லி; நிதி ஒதுக்கிய மத்திய அரசு

தேசிய அளவில் காற்றின் தரத்தை உயர்த்தி மாசுபாட்டை குறைக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தூய்மை காற்று திட்டத்தின் மூலம் தில்லிக்கு முதல்முறையாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய தூய்மை காற்று திட்டத்தின் மூலம் நாட்டின் தலைநகர் தில்லிக்கு மத்திய அரசு 18 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. காற்று மாசு மேலாண்மைக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 2024ஆம் ஆண்டுக்குள், தேசிய அளவில் பிஎம்2.5, பிஎம்10 ஆகிய நுண் துகள்கள் வகைகளை 20 லிருந்து 30 சதவிகிதம் வரை குறைப்பதற்காக தேசிய தூய்மை காற்று திட்டம் வகுக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டை கணக்கில் கொண்டு இது ஒப்பிடப்படவுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதி குறித்து உயர்மட்ட அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "என்சிஏபி திட்டத்தின் மூலம் தில்லி 18.74 கோடி ரூபாய் நிதியை பெறவுள்ளது. 2019ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக தில்லிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற காற்றின் தர நிலையை பூர்த்தி செய்யாத 132 நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. தேசிய காற்று கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 2011-2015 காலகட்டத்தில் பெறப்பட்ட சுற்றுப்புற காற்றின் தரவின் அடிப்படையில் இந்த நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிஎம்10 நுண் துகள்களுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆண்டு தரநிலை ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம். பிஎம்2.5 வகை நுண் துகள்களுக்க இது ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராமாக உள்ளது. 

தில்லியில் கடந்த 2017ஆம் ஆண்டு, பிஎம்10 வகை நுண் துகள்களின் சராசரி ஒரு கன மீட்டருக்கு 240 மைக்ரோகிராமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு, பிஎம்10 வகை நுண் துகள்களின் சராசரி ஒரு கன மீட்டருக்கு 168 மைக்ரோகிராமாக இருக்க வேண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

முதல் இரண்டு ஆண்டுகள் ஏன் தில்லிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர், "தேசிய தலைநகருக்கு இத்திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக எந்த நிதியும் கிடைக்கவில்லை. ஏனெனில், 2,000 சிசிக்கு மேல் உள்ள டீசல் வாகனங்களுக்கும் தில்லிக்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கும் மாசு வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் அதற்கு நிதி கிடைத்தது. இம்முறை, தேசிய தூய்மை காற்று திட்டத்திற்கு அதிக நிதி கிடைத்துள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com