உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜகவைச் சேர்ந்த குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்தில் துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் மீது பாஜகவினர் தங்களது வாகனங்களை ஏற்றியதாகக் கூறி இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜகவைச் சேர்ந்த குஷ்பூ, “உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனங்கள் ஏற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகப்பெரும் குற்றம். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பிவரும் நிலையில் பாஜகவினரை குஷ்பூ விமரிசித்திருப்பது அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.