லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் இருவரை வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை லக்கிம்பூரில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், லக்கிம்பூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று காலை வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், யாரையெல்லாம் கைது செய்துள்ளீர்கள், முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பது குறித்த விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, விவசாயிகள் மீது ஏற்றப்பட்ட காரில் இருந்த இரண்டு பேரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.