பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம் என்ற பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலரும் கட்சியின் மாநிலப் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியது:
"அமரீந்தர் சிங் பாஜகவுடன் பயணிக்க விரும்பினால் பயணிக்கட்டும். மதச்சார்பின்மைக்கான அர்ப்பணிப்பைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால் அவரை யாரால் தடுக்க முடியும்? அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளிப்பதன் சின்னமாகவே அமரீந்தர் சிங் கருதப்பட்டார். நீண்ட நாள்களாக காங்கிரஸ் பாரம்பரியத்துடன் இணைப்பில் இருந்துள்ளார்.
பாஜக 10 மாதங்களாக விவசாயிகளை எல்லையில் காக்க வைத்ததை யாரால் மறக்க முடியும்? விவசாயிகள் போராட்டம் கையாளப்பட்ட விதத்தை பஞ்சாப் மன்னிக்குமா? அவரது அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. அவருள் இருந்த மதச்சார்பின்மை அமரீந்தரை அவர் கொன்றுவிட்டதுபோல இருக்கிறது.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை. சொல்லப்போனால் எங்களது எதிரிகளின் வாக்குகளையே இது பிரிக்கும். காங்கிரஸ் பாதிக்கப்படாது. சன்னி அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தே காங்கிரஸ் வாக்குகள் உள்ளன. சன்னி தொடங்கியிருக்கும் விதம் பஞ்சாப் மற்றும் ஒட்டுமொத்த நாடு முழுவதிலும் நன்மதிப்பை உருவாக்கியுள்ளது.
உத்தரகண்ட் குறித்துப் பேசுவதற்காக ராகுல் காந்தியைச் சந்திக்க வந்தேன். அங்கு தேர்தல் நடைபெறும். சமீபத்திய இயற்கைப் பேரிடர் உத்தரகண்டை முடக்கியுள்ளது. அதுகுறித்து அவரிடம் விவரித்தேன். காங்கிரஸ் தலைவரையும் சந்திப்பேன்" என்றார் ஹரீஷ் ராவத்.
முன்னதாக, புதிய கட்சியைத் தொடங்கவிருப்பதாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்குத் தீர்வு கண்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம் எனவும் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.