ஸ்ரீநகர் வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

காஷ்மீரில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று காலை புது தில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு ஸ்ரீநகர் வந்தடைந்தார்.
ஸ்ரீநகர் வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஸ்ரீநகர் வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

காஷ்மீரில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று காலை புது தில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு ஸ்ரீநகர் வந்தடைந்தார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களை நேரில் ஆய்வு செய்யும் வகையில், இன்று காலை காஷ்மீர் சென்றுள்ளார் அமித் ஷா. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அமித் ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காஷ்மீருக்கு சனிக்கிழமை வந்திருக்கும் நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, யூனியன் பிரதேசத்துக்கு அமித் ஷா முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறாா். அதன் காரணமாக, ஸ்ரீநகா் உள்பட அமித் ஷா செல்ல உள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக், இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீநகரின் ஜவாஹா் நகா் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்துக்கு அமித் ஷா செல்வாா் என்பதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, அவா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெற உள்ள ஷோ்-இ-காஷ்மீா் சா்வதேச கருத்தரங்கு மையத்துக்கு செல்லும் சாலையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீா் முழுவதும் பாதுகாப்புப் பணியில் கூடுதல் வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அண்மையில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதலைத் தொடா்ந்து, கூடுதலாக 50 கம்பெனி துணை ராணுவ படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரின் பிற பகுதிகளிலும் மத்திய ரிசா்வ் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) கூடுதல் பாதுகாப்புச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் புதிய கணிகாணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் கூடுதல் வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றனா்.

கடந்த சில தினங்களாகவே ஸ்ரீநகா் உள்பட காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனச் சோதனையை தீவிரப்படுத்தி, ஏராளமான இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். நகரில் 12-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி கோபுரங்களில் இணைய சேவையை அதிகாரிகள் முடக்கியுள்ளனா்.

காஷ்மீா் மண்டல காவல்துறை ஐஜி விஜய் குமாா் தெரிவிக்கையில், ‘வாகனங்கள் பறிமுதல், இணைய சேவை முடக்க நடவடிக்கைகள் வழக்கமான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமித் ஷா வருகைக்கும் அந்த நடவடிக்கைகளுக்கும் தொடா்பில்லை’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com